ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய கல்வி நிலையங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு!
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ,மாணவிகள் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை (Fresh applications) விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-2023ம் கல்வியாண்டில் புதியதாக (Fresh applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
மேலும் https://bcmbcmw.tn.gov.in / welfschemes.htm#scholarship scheme என்ற இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் மேற்படி 2022-2023-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை தேர்வு செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக முகவரிக்கு 31.01.2023 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment