அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் சாதனை - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்!
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றவாறு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெறத்தக்கவர்களாக மாற்றுவதில் தொழிற்பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்கள் குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீர ராகவ ராவ். இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ்நாட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 54 பொறியியல் மற்றும் 24 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் Fitter, Electrician, Welder, A.C. Mechanic, Wireman போன்ற தொழிற்பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு Technician Medical Electronics, Technician Power Electronics System, Fire Technology and Industrial Safety Management, Smart Phone Technician மற்றும் Architectural Draughtsman உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் சிறப்பாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்று குறிபிட்டுள்ளார்.
ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி தொழில் 4.0 தரத்திலான Industrial Automation, Robotic, e-Vehicle Mechanic, Manufacturing Process Control, Design and Virtual Verifier, Additive Manufacturing, Industrial Painter மற்றும் IoT போன்ற தொழிற்பிரிவுகளில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வழங்க இத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சென்ற ஆண்டில் பயின்ற மாணவர்களில் 92.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 75% பேர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தமுள்ள 26632 இருக்கைகளில் 24977 மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர்.
இத்துறையின் வரலாற்றிலேயே முதன் முறையாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 90%-த்தைக் கடந்து 93.79% சேர்க்கை நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 51 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100% சேர்க்கை நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment