டெங்கு 360°
ஊரெங்கும் பருவ மழை பெய்து வரும் சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்த அறிவைப் பெறுவது நம் அனைவரின் கட்டாயக் கடமையாகும்.
முதல் மூன்று நாட்கள் உடல் கொதியோ கொதி என்று கொதிக்கும். சர்வ சாதாரணமாக 102° - 104° காய்ச்சல் அடிக்கும்.
கூடவே கண்களுக்குள் கடுமையான வலி. உடலின் மூட்டுகளை உடைத்துப்போடும் அளவு வலி குறிப்பாக முதுகு குறுக்கு வலி ஏற்படும்.
இத்துடன் வேறு அறிகுறிகள் ஏதும் பொதுவாக இருக்காது. ஆயினும் சிலருக்கு மூக்கொழுகுதல் , இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.
இந்த கட்டத்தை காய்ச்சல் அடிக்கும் காலம் (FEBRILE PHASE) என்று கொள்ளலாம்.
அடுத்த மூன்று நாட்கள், முந்தைய காய்ச்சல் காலத்துக்கு நேர்மாறாக
உடல் சில்லென்று குளிர்ந்து போகும். குறிப்பாக பாதம் , உள்ளங்கை போன்றவை குளிர்ந்து விடும். காய்ச்சல் விட்டு இந்த குளிர் நிலை ஆரம்பமாகும் போது தான் பிரச்சினைக்குரிய காலகட்டம்.
இதைத்தான் அபாயகரமான காலகட்டம் (CRITICAL PHASE) என்கிறோம்.
டெங்குவால் ஏற்படும் ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிப்பதே இந்த 4, 5, 6 நாட்களில் தான் என்பதை அறிய வேண்டும்.
காய்ச்சலோட போக்கைப் பாருங்கள்
முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டென்று குறைகிறது.
இரண்டு நாள் குறைகின்ற காய்ச்சல் திடீரென்று 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏற்றம் காணுகிறது
ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான்.
முதல் மூன்று நாட்களில் , உடல் உஷ்ணத்தால் உடம்பில் இருக்கும் நீர்சத்து வெகுவாக குறைகின்றது.
நாக்கு வரண்டு போகும்.
சிறுநீர் சரியாக செல்லாது.
இவையெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும்.
அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு "போர் காலம்". இதில் தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது.
ரத்தக் கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம்.
மலம் கருப்பாக வெளியேறுவது
நடக்கலாம். ரத்த பரிசோதனைகளில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது, ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம், 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.
வந்திருப்பது டெங்கு என்பதை பின்வரும் விசயங்கள் மூலம் அறியலாம்
1. அதீத காய்ச்சல் + காய்ச்சலுடன் கடுமையான உடல் வலி + மூட்டுக்கு மூட்டு வலி இருப்பது + கண்களுக்குள் அதீத வலி.
2. கூடவே வேறு அறிகுறிகள் ( இருமல் / சளி) இல்லாமல் இருப்பது.
3. மூன்று நாட்கள் மிக அதிகமான காய்ச்சல் பிறகு சட்டென்று குறைவது
4. அன்றாட வேலைகளைக் கூட செய்யவிடாமல் சாதாரண பாராசிட்டமால் மாத்திரைக்குக் கேட்காத அளவு காய்ச்சல் மற்றும் உடல் வலி
மேற்சொன்ன பிரச்சனைகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரைச் சந்தித்து சில காலம் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவது கூட தவறே இல்லை.
தயவு செய்து மெடிக்கல் ஷாப்களில் வலி ஊசி போட்டுக்கொள்ளாதீர்கள். வயிற்றில் ஏற்படும் ரத்தக்கசிவை இந்த வலி ஊசிகள் மற்றும் மாத்திரைகள் இன்னும் அதிகமாக்கி ஆபத்துக்கு வழிவகுத்து விடும்.
டெங்கு குறித்த விழிப்புணர்வுடன் இருப்போம்… டெங்குவால் நேரும் உயிரிழப்புகளைத் தவிர்ப்போம்.
நன்றி:
டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Post a Comment